62 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இவ்வாண்டில் அடையாளம் : 60 பேர் உயிரிழப்பு...!


நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 62,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெருமளவானோர் சிறுவர்களாகவும், 50 வயதுக்கு குறைந்தவர்களாகவும் உள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (ஒக் 26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இதுவரை 62,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகரிப்பினை காண்பிக்கிறது.

இந்நிலையில் இதுவரை 60 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்களாகவும், 50 வயதுக்கு குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

எனவே, திடீரென காய்ச்சல் ஏற்பட்டு 24 மணித்தியாலங்களுக்கு நீடித்தால், குறிப்பாக, கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு வலியுறுத்துகின்றோம்.

‍இதேவேளை காய்ச்சல் ஏற்படும்போது பரசிட்டமோல் மாத்திரம் அருந்துமாறும் அறிவுறுத்துகின்றோம்.

தற்போது 50 சதவீதத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்படுகின்றனர்.

மேல் மாகாணத்தில் குறிப்பாக கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

மேல் மாகாணம் தவிர கண்டி, களுத்துறை, காலி, புத்தளம், யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த இரு வாரங்களாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் காணப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் வாரங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

எனவே, சகலரையும் சுற்றுச்சூழலை தூய்மையாக பேணுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Post a Comment

Previous Post Next Post