ரூ. 75 மில்லியன் சொத்துக் குவிப்பு : விமலுக்கு எதிரான வழக்கை முன்கொண்டு செல்ல முடியாதென அறிவிப்பு


சட்டத்துக்கு புறம்பான வழிகளில் சொத்து சேர்த்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கினை முன்னெடுத்து செல்ல முடியாது என புதன்கிழமை ( 26) அவரது சட்டத்தரணிகள் கொழும்பு மேல் நீதிமன்றில் அடிப்படை ஆட்சேபனங்களை முன் வைத்தனர்.

கொழும்பு மேல் நீதிமன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த விவகாரத்தின் குற்றப் பத்திரிகையை மையப்படுத்திய வழக்கை, ' முன் விளக்க மாநாட்டுக்கு ' திகதி குறித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இவ்வாறு வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.

இதன்போது குற்றம் சட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடந்த தவணையில் மன்றில் ஆஜராகியிருக்காத நிலையில் நேற்று வைத்திய அறிக்கையுடன் மன்றில் ஆஜராகியிருந்தார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்ர பெர்ணான்டோ மன்றில் தோன்றினார்.

தனது சேவை பெறுநருக்கு எதிரான வழக்கானது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோ, அச்சட்டத்தின் கீழ் அரச அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே குற்றச்சாட்டுக்களை முன்னெடுக்க முடியும் என அவர் வாதிட்டார். அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அமைச்சர்களுக்கோ எதிராக குற்றச்சாட்டினை இலஞ்ச சட்டத்தின் கீழ் முன் வைக்க முடியாது என அவர் வாதிட்டார்.

தனது சேவை பெறுநர், சட்டத்தில் கூறப்பட்டுள்ள ' அரச அதிகாரி ' எனும் வகைப்படுத்தலின் கீழ் வரமாட்டார் என தெரிவித்த அவர், அதனால் குற்றப்பத்திரிகையை நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இதன்போது வழக்குத் தொடுநர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினருக்காக மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன, இந்த அடிப்படை ஆட்செபனம் தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணங்கலை முன் வைக்க மன்றில் கால அவகாசம் கோரினார்.

அதனை ஏற்ற நீதிமன்றம், அடிப்படை ஆட்சேபனம் குறித்த எழுத்து மூல சமர்ப்பணங்கலை எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முன் வைக்குமாரு கூறி அதுவரை வழக்கை ஒத்தி வைத்தது.

விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலப்பகுதியில், அதாவது 2009 ஜனவரி முதலாம் திகதிக்கும் 2014 டிசம்பர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சம்பாதிக்கப்பட்ட வழி முறையை வெளிப்படுத்த முடியாத வகையில் சேர்க்கப்பட்ட 75 மில்லயன் ரூபா பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலேயே இந்த சொத்துக் குவிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 26 குற்றச்சாட்டுக்களை விமல் மீது சுமத்தியுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக் குழு, அவற்றை நிரூபிப்பதற்காக 32 சாட்சிகள், 13 ஆவணங்கள் மற்றும் 40 தடயப் பொருட்களின் பட்டியலையும் நீதிமன்றில் சமர்பித்துள்ளது.

விமலால் சட்டத்துக்கு புறம்பாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மேற்படி சொத்துக்களில் வீடு, வாகங்கள் மற்றும் பணம் ஆகியன உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

நன்றி...
வீரகேசரி

Post a Comment

Previous Post Next Post