ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நேற்று (25) அதிகாலை இஸ்ரேல் படையினர் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலின்போது ஆறு பலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பெரும் எண்ணிக்கையான இஸ்ரேலிய படையினர் நப்லுஸ் நகருக்குள் ஊடுருவிய நிலையில் பலஸ்தீன பாதுகாப்பு படையினர் மற்றும் போராளிகளுடன் மோதல் ஏற்பட்டதாக பலஸ்தீன பத்தா அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் நிராயுதபாணியான பலஸ்தீனர் ஒருவர் உட்பட ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்ட பலஸ்தீன சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றொரு பலஸ்தீன இளைஞர் கொல்லப்பட்டதை பின்னர் உறுதி செய்தனர்.
இதில் மேலும் 21 பலஸ்தீனர்கள் காயமடைந்திருப்பதோடு நால்வரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தமது இராணுவம் நப்லுஸில் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றில் ஈடுபட்டதாக மாத்திரமே இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் கடந்த இரண்டு வாரங்களாக நப்லுஸ் நகரை முடக்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment