
இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள நாயகம் கே.எம்.ஏ. பண்டார தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த ஊடகச் செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வனப்பாதுகாப்பு திணைக்கள நாயகம் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையே வனப்பரப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படுவதுடன் 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடையவுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இலங்கையின் இயற்கை காடுகள் மொத்தப் பரப்பளவில் 29.15% (1,912,970 ஹெக்டயர்) என்று அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய மனித செயற்பாடுகள் காரணமாக காடுகளின் அளவு ஓரளவு குறைந்துள்ளதாகவும், ஆனால் ஊடகங்களில் கூறப்பட்டுள்ளபடி காடுகளின் அளவு 16% வரை ஒருபோதும் குறையவில்லை எனவும் வனப்பாதுகாப்பு திணைக்கள நாயகம் தெரிவித்தார்.
குறித்த ஊடக அறிக்கையின்படி, இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 16% மாத்திரமே வனப்பகுதி இருந்தால், நாட்டில் தற்போதுள்ள வனப்பகுதி 1,040,000 ஹெக்டெயராக இருக்க வேண்டும், அதாவது 2015, ஆம் ஆண்டிலிருந்து ஏழு ஆண்டுகளில் 872,970 ஹெக்டயர் காடுகள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், ஒரு வருடத்துக்கு 124,710 ஹெக்டெயர்களும் நாளொன்றுக்கு 341 ஹெக்டயர் காடுகள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
காடுகள் தொடர்பில் தரவுகளை வழங்கும்போது, காடுகள் மதிப்பிடப்பட்ட விதம் விவரிக்கப்பட வேண்டும். காடுகளின் வரையறை, காடுகளின் அளவை மதிப்பிடும் முறை மற்றும் காடுகளின் அளவை மதிப்பிடுதல் போன்ற அடிப்படை புள்ளி விபரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். வனப்பரப்பு குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உரிய தரவுகள் கிடைத்ததற்கான எந்த ஆதாரமும் குறிப்பிடப்படவில்லை எனவனப்பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும், குறித்த ஊடகச் செய்தியில் காட்டப்பட்டுள்ளபடி காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டிருந்தால், வனப்பாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸார் மற்றும் வானிலிருந்து காடுகளைக் கண்காணிக்கும் இலங்கை விமானப்படை ஆகியவற்றால் கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இவ்வளவு பாரிய வன அழிவுகள் இந்த எந்த நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை. வனப்பாதுகாப்புத் திணைக்களம் வன வரைபடங்களை புதுப்பித்து வருவதாகவும், அந்த நடவடிக்கைகளின் போது அவ்வாறான காடழிவு எதுவும் நடந்ததாக கண்காணிக்கப்படவில்லை என்றும் வனப்பாதுகாப்பு திணைக்கள நாயகம் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment