விதிகள் மாறிவிட்டன... சச்சினுடன் விராட் கோலியை ஒப்பிடுவது குறித்து கவுதம் கம்பீர் விமர்சனம்...!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 73வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது.

அதை தொடர்ந்து 374 ரன்களை துரத்திய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ஆட்டநாயகன் விருதை விராட் கோலி வென்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் 45 சதங்களையும் ஒட்டுமொத்தமாக 73 சதங்களையும் அடித்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனையை விரைவில் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் எவ்வளவு சதங்கள் அடித்தாலும் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிட முடியாது என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இது சாதனையை பொறுத்ததல்ல. நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை விட அதிக சதங்கள் அடிப்பார். ஏனெனில் இப்போது விதிமுறைகள் மாறிவிட்டன. அப்போதைய காலத்தை இப்போதுடன் ஒப்பிட முடியாது.

ஏனெனில் அப்போது ஒரு இன்னிங்ஸில் 1 புதிய பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் இப்போது 2 புதிய பந்து பயன்படுத்தப்படுவதுடன் உள்வட்டத்திற்குள் 5 பீல்டர்கள் நிறுத்தப்படுகிறார்கள். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி ஒரு தலைசிறந்த வீரர், அதை அவர் நீண்ட காலமாக காட்டியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post