இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை செய்வது பாதகமானது அல்ல - மத்திய வங்கியின் ஆளுநர்…।



இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை செய்வது பாதகமானது அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். சிறந்த பொருளாதார சந்தையைக் கொண்டிருக்கின்ற இந்தியாவுடன் எட்கா போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்வது இலங்கைக்கு நன்மையே என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று இலங்கை மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துரையாடிய ஆளுநர் நந்தலால், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை விளக்கினார் .

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது எட்கா உடன்படிக்கை குறித்து இந்திய பிரதமர் தெரிவித்துள்ளமை குறித்து தமிழன் பத்திரிகை ஆசிரியர் ஆளுநரிடம் கேள்வியெழுப்பினார்.அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

‘‘எட்கா ஒப்பந்தத்தில் பாதகம் உள்ளதாக நான் கருதவில்லை. இந்தியா, மிகப் பெரிய பொருளாதார சந்தையைக் கொண்டிருக்கின்ற நாடு. இந்நிலையில் எட்கா உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் மற்றும் வர்த்தக அமைச்சு தீர்மானிக்க வேண்டும். ஆனால், என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இந்தியாவுடனான பொருளாதார வர்த்தக உடன்படிக்கையானது எமக்கு நன்மை தருவதாக அமையும். வருடந்தோறும் ஏழு மற்றும் எட்டு வீதங்களின் பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது.

எனவே, அதுபோன்ற ஒரு மிகப் பெரிய சந்தையைக் கொண்ட நாட்டுடன் நாம் வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவது சிறந்ததாக அமையும். அதில் எவ்வாறான தொழில்நுட்பங்கள் இடம்பெறும் என்பதை பேசித் தீர்மானிக்கலாம். ஆனால், அந்த நாட்டுடனான வர்த்தக உடன்படிக்கை எமக்கு முக்கியமாகும். இந்தியா மட்டுமல்ல ஆசிய பசுபிக் நாடுகளுடன் நாம் அதிக வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்ள வேண்டும்’’ என்றும் குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post